வரலாற்றுக் கதைப் புனைவுகளில், மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் நாவல் பொன்னியின் செல்வன். கல்கியின் எழுத்தாற்றலுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்த நாவல். ஏராளமான இரசிகர்களையும் பாராட்டுக்களையும் கல்கிக்கு வாரிக் கொடுத்த இலக்கிய வடிவம் இந்த பொன்னியின் செல்வன்.
இந்த நாவல் இப்பொழுது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதுவும் கோச்சடையான் போல அனிமேஷன் படமாக வளர்கிறது.
இந்தப் படத்தினை தயாரித்து வரும் சரவணராஜாவை கொஞ்சம் நாவலை கதையாக்கும் முயற்சி பற்றி கேட்டோம்.
'' 2500 பக்கங்களைக் கொண்ட பொன்னியின் செல்வனை பல தடவைகள் படித்து இன்புற்ற அன்பர்களில் நானும் ஒருவன். அந்தக் கதை எனக்கு இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று. எனவே, இந்நாவலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவே அனிமேஷன் திரைப்படமாக திரைக்கு கொண்டுவரவுள்ளேன். இன்றையை நிலையில் வரலாற்று புராண கதைகள் எடுபடுமா என்றும் கேட்கிறார்கள்.
இரசிகர்களுக்கு தரமான நல்ல படைப்புக்கள் காலம் தாண்டியும் பிடிக்கும் என்பதற்கு இந்த பொன்னியின் செல்வன் நல்ல உதாரணமாக அமையும். இந்தக் கால தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லும் நோக்கத்திலேயே படமாக உருவாக்கி வருகிறேன். இரசனை குறையாமல், கதை சிதைவடையாமல் கருத்தோடு களத்துக்கு வருகிறது பொன்னியின் செல்வன் 2டி அனிமேஷனாய்..''
இவ்வாறு சரவண ராஜா சொல்கிறார்.
நடிகர்களின் தெரிவு நடைபெற்று வருவதோடு, இதற்கு பிரபலமான நடிகர்களையே பின்னணி பேசவும் முயற்சி செய்வதாக படக்குழு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
ஆக, பொன்னியின் செல்வன் திரையில் வருவது மகிழ்ச்சி.
திரையில் வந்து நாவலின் தரம் தன்மை கெடாமல் இருக்க வேண்டியதும் முக்கியமாக இருக்கிறது.
பார்க்கலாம்
பொன்னியின் செல்வனை திரையில்!! மிக விரைவில் !!