12,771 Views
'தல' அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார் என்பதும், அதன் மூலம் பல படங்களில் ஹீரோவாக நடித்து வாங்காத பெயரை இந்த ஒரே படத்தின் மூலம் பெற்று பெரிய அளவில் பேசப்படும் நடிகர் ஆகிவிட்டார் என்பதும் இப்போது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆனால், 'தல' யின் "என்னை அறிந்தால்" வாய்ப்புக்காக தான் ஹீரோவாக நடித்த படத்தையே அருண் விஜய் தள்ளி வைத்ததை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
தற்போது அருண் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "வா டீல்". ஃபெதர் டச் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திகா நாயகியாக நடிக்க, தமனின் இசையில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில், சவால் என்று வந்தால் அதை வா வா என்று எதிர்கொள்ளும் கதாபாத்திரம் அருண் விஜய்க்கு. இந்தப் படத்தை முடித்து ரிலீஸ் செய்ய தயாராக இருந்தபோது தான் "என்னை அறிந்தால்" படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தது என்கிறார் அருண் விஜய்.

அத்துடன், 'இயக்குனர் கெளதம்மேனன் கதை சொன்னபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்தது. ஆனாலும் "வா டீல்" படத்தை வெளியிட்டுவிட்டு நடிப்பதாக அஜித்திடம் சொன்னேன். நான் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அஜித் "வா டீல்" படத்தை பார்த்தார். அதன்பின் தனது "என்னை அறிந்தால்" படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வெளியீடு செய்யும்படி கூறினார். அவர் ஏன்அப்படிச் சொன்னார் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவருடன் நடித்தபிறகு எனக்கு கிடைத்திருக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு இத்தனை வருடம் எனக்கு கிடைக்காமல் இருந்தது. இப்போது அவரது ரசிகர்களும் என்னை விரும்புகின்றனர்' என்று மனம் திறக்கிறார் அருண் விஜய்.
எது எப்படியோ, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் தென்னிந்திய திரையுலகில், சுயநலம் இல்லாத ஒருவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் நம்ம 'தல' அஜித்.
*கணேசமூர்த்தி ராகவன்.