National Pongal day celebration - விக்கிக்கு , ரணில் வழங்கிய பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,374 Views
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் அரசாங்கம் மூன்று விடயங்கள் குறித்து முக்கியமாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இன்றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வடமாகாணம் அதன் அவலங்களில் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை, தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணாமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை, மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.
எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன. ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க் குற்ற விசாரணைகளை 2015 செப்ரெம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை. இவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது என்று அவர் கூறினார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றி இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கவலை வெளியிட்டார்.
வடக்கு மாகாண சபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் குறித்து வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமை மற்றும் தனியாரின் காணிகளில் இராணுவம் உள்ளமை குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இது தவிர, யுத்த குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
அத்துடன், ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மிகுதியான காணிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவித்த பிரதமர், அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஹுகோ சுவயரும் கலந்து கொண்டனர்.