கெத்தை இழந்த "கெத்து" - எச்சரிக்கும் உதயநிதி.
அண்மையில் பொங்கல் வெளியீடாக வந்து நிறையவே எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது "கெத்து" திரைப்படம். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படம், கொமெடிக்கு சந்தானம் இல்லாமல் முதல் முறையாக உதயநிதியின் நடிப்பில் வெளியாகியிருக்கின்றது.
ஹரிஷ் ஜெயராஜின் இசையையும், தனது நடிப்பு திறமை.....?யின் மீது கொண்ட அதீத நம்பிக்கையையும், எமி ஜாக்சனின் அழகையும் மட்டும் கொண்டு தனது தயாரிப்பு நிறுவனமான 'ரெட் ஜெயண்ட்ஸ்' மூலம் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் உதயநிதி. அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் சிறந்த ஒரு நடிகரான சத்தியராஜின் நடிப்பையும் இந்தப்படத்தின் மூலம் வீணடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் குடும்ப அரசியல் பின்புல பலமும், பணபலமுமே இதுவரையில் தமிழ்த் திரையுலகில் நடிகர் உதயநிதி தாக்குப்பிடித்து நிற்க காரணம் என்பதே உண்மை. அதைவிட இதுவரை உதயநிதி நடித்த படங்கள் ஓரளவு சுமாராக ஓடுவதற்கு அவரது குடும்ப பின்னணியில் இயங்கும் தமிழகத்தின் சில பிரபல ஊடகங்கள் மூலமான இடைவிடாத விளம்பரப்படுத்தல்களும், இயக்குனர் ராஜேஷின் திறமையும் சந்தானத்தின் கொமெடியுமே காரணமாக அமைந்திருந்தன. இந்தநிலையில் இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் அல்லாத, சந்தானத்தின் கொமெடி அற்ற இந்த "கெத்து" திரைப்படம் தன்னுடைய கெத்தை இழந்து நிற்கின்றது என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
நல்லதொரு திரைக்கதை அமைந்தும் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்று ஒரு சாராரும், 'மாஸ் ஹீரோ ஒருவருக்கான கதை இது, இந்த கதையில் தான் நடிக்காமல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கதைக்குப்பொருத்தமான முன்னணி நட்சத்திரம் ஒருவரை நடிக்கவைப்பதன் மூலம் படத்தை வெற்றியடைய செய்திருக்கலாம்' என இன்னொரு தரப்பினரும் தமது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விமர்சனங்களால் விழி பிதுங்கி நிற்கும் உதயநிதி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படத்திற்கெதிரான விமர்சனங்களை நிறுத்த நீதிமன்றத்தை நாடப்போவதாகவும், வழக்கு தொடரப்போவதாகும் எச்சரிக்கை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
எது எப்படியோ, தித்திப்பான பொங்கல் நாளில், பல படங்களுடன் ரேசில் களமிறங்கிய கொமர்சியல் படமான "கெத்து" வணிக ரீதியில் எடுபடாமல் போயிருக்கின்றது என்பது உதயநிதிக்கு கசப்பான செய்தியே.