பல்வேறுபட்ட துறைகளில் மிகப்பெரும் சேவையாற்றி, தமது இந்தியத் தாய் நாட்டை பெருமைப்படுத்திய புகழ்பெற்றவர்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ விருதுகளான பத்ம விருதுகள் நேற்றையதினம் மாலையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு வழங்கப்படும் விருதுகளில் சினிமாத்துறை சார்ந்தவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர். அந்த வகையில், இம்முறை நம்ம "சூப்பர் ஸ்டார்" நடிகர் ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருதை வழங்குவதாக அறிவித்து கெளரவப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்தநிலையில், விருதை ஏற்றுக்கொள்ளவிருக்கும் நம்ம "சூப்பர் ஸ்டார்" ரஜினி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இது பற்றி குறிப்பிடுகையில் “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.
இது இப்படியிருக்க, ரஜினிக்கு ‘பத்ம விபூஷண்’ விருதுஅறிவிக்கப்பட்த செய்தி வெளியானவுடன் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் டுவிட்டரில், “தலைவருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்திருப்பது பெருமை அளிக்கிறது. இது மிகவும் அற்புதமானதொரு நாள்” எனப் பதிவிட்டு பெருமையடைந்திருக்கிறார். அவரோடு ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, ஆஸ்கார் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர்களோடு நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் ரஜினிகாந்தை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனராம்.
அதேவேளை, அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவிக்க போட்டிபோட்டுக்கொண்டு வரிசைகட்ட ஆரம்பித்திருக்கின்றார்கள். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ் திரையுலகிற்கு பல்லாண்டு காலமாக கலைச்சேவை ஆற்றிவரும் ரஜினிகாந்துக்கு இந்த விருது கிடைத்தமைக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள். நதிகள் இணையவேண்டும். நாட்டின் வளம் பெருகவேண்டும் என்று மாபெரும் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தபோது தனது ஆதரவை தெரிவித்ததே அவருடைய சமூக அக்கறைக்கு ஒரு உதாரணம்” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, “பத்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துகள். இந்த விருதுக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர் தலைவா” என்று வாழ்த்தி இருக்கிறார்.