2,637 Views
குறிப்பாக ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை.
சிறைக்காட்சிகளில் லயித்துப்போன பார்வையாளர்கள், தானும் சிறைக்குள் இருந்ததுபோல் உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். பார்வையாளர்கள் இப்படியொரு உணர்வுகளில் அமிழ்ந்து போனதற்கு கதை ஏற்படுத்திய பாதிப்பு பாதி காரணம் என்றால்… காட்சிகள் ஏற்படுத்திய பாதிப்பு மீதி காரணம்.
கதையைத் தாண்டிச்செல்லாத ஏகாம்பரத்தின் யதார்த்தமான ஒளிப்பதிவே பார்வையாளனை இவ்வாறு உணர வைத்திருக்கிறது எஸ்.பி.ஜனநாதனின் இயற்கை, ஈ படங்களுக்கும் இவரே ஒளிப்பதிவாளர். இதோ இப்போது புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்துக்கும்… விஜய் நடித்த தமிழன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஏகாம்பரம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் 18 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
டிஜிட்டல் கமராக்கள் வந்த பிறகு கோடம்பாக்கத்தில் தடுக்கிவிழுந்தால் ஒளிப்பதிவாளர்கள் மீதுதான் விழ வேண்டும் என்கிற அளவுக்கு ஒளிஓவியர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது. எனினும், தனித்துவமும், ஒளிப்பதிவு குறித்த தேடலும் உள்ளவர்களால் மட்டுமே உயரத்தைத் தொட முடிகிறது. ஏகாம்பரமும் அப்படி உச்சத்தைத்தொட்ட ஒளிப்பதிவாளர்.
குறிப்பாக, புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் இவரது பணி பிரமிக்க வைத்திருக்கிறது.
“இந்தப் படம் ஒளிப்பதிவாளருக்கு சவாலான படம். குலுமணாலி பனிமலை, ராஜஸ்தான் பாலைவனம், சிறைச்சாலை செட் என மூன்று வித்தியாசமான களத்தில் படமாக்க வேண்டியது இருந்தது. சிறைச்சாலை செட்டில் அதிக காட்சிகள். ஆனாலும் ஒரு காட்சி போல இன்னொரு காட்சி வந்துவிடக்கூடாது. ஒரு பிரேம் போல இன்னொரு பிரேம் வந்துவிடக்கூடாது என்று நிறைய நிறைய நேரம் செலவு செய்தோம்.”
“ஒரு படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனரின் கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் மதிப்பளிக்க வேண்டும். அவரது கற்பனைக்கு உயிர்கொடுக்க உழைக்க வேண்டும். ஒளிப்பதிவில் நான் கடைபிடிக்கும் இலக்கணம் இதுதான்.
என்று சொல்லும் ஏகாம்பரம் தற்போது ஒரு ஹிந்திப்படத்தில் பணியாற்றி வருகிறாராம்.
=== CASTRO RAHUL ===