அஜித்தின் "தல 56" - மீண்டும் பாட்ஷா.......?????
“என்னை அறிந்தால்” வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வெற்றியைக் கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுக்க 'தல' அஜித் ஆர்வத்துடன் நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் "தல56".
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க சிவாவின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை வழங்க, ஸ்ருதிஹாஷன் ஜோடியாகவும், 'தல'க்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடிக்க மிக வேகமாக வளர ஆரம்பித்திருக்கிறது "தல56". சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அண்மித்த பிரதேசங்களில் சிறப்பாகவும், கவனமாகவும் நடைபெறுகின்றது.
"தல 56" படக்குழுவினர் படப்பிடிப்பின்போது மிகக்கவனமாகவே படப்பிடிப்பை நடத்துகின்றார்களாம். படப்பிடிப்பு நிறைவடைந்து படம் திரைக்கு வரும் வரைக்கும் படத்தின் கதை என்னவென்று இறுதி வரைக்கும் ரகசியம் காக்கவேண்டும் என்பதே இந்தக் கவனத்திற்குக் காரணம். ஆனாலும் படம் குறித்த கதைகள், ஊகங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அதனால் படக்குழுவினர் பெரிதும் குழப்பமடைந்துள்ளதாகவும் கோடம்பாக்கம் செய்திகள் சொல்கின்றன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, அவருக்கே பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த "பாட்ஷா" திரைப்படத்தின் மீளுருவாக்கம் தான் இந்த "தல 56" என்றும், ரஜினியின் தங்கையாக நடித்த யுவராணி பாத்திரத்தில் தான் லட்சுமிமேனன் நடிக்கிறார் என்றெல்லாம் ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல் குறித்து படக்குழுவினர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை இவ்வாறான ஊகங்களுக்கு அவர்கள் எந்த விதமான மறுப்பையும் வெளியிடவில்லையாம்.
இது இப்படியிருக்க, அஜித் ஏற்கனவே பாட்ஷா திரைப்பட சாயலில் "ஜனா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆக அமையவில்லை. அதே போல பாட்ஷா படத்தின் தழுவல்களாக தமிழில் வெளிவந்த "கஜேந்திரா" "தலைவா" "அஞ்சான்" போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றிப்படங்களாக அமையவில்லை. இந்தநிலையில் பாட்ஷா படத்தின் கதை போன்ற இன்னொரு கதையை தான் நடிக்கும் அடுத்த படத்திற்காக தேர்வு செய்ய மாட்டார் 'தல' என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
இதேவேளை, இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமும் பாட்ஷா படத்தைப் போன்ற வகையிலான ஒரு "கேங்ஸ்டார்" கதையம்சம் கொண்ட படமாகத்தான் வெளிவரவுள்ளதாம். இதனால் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான கதைகளைக் கொண்ட இரண்டு படங்கள் வெளியாகுவதும், அவை வணிகரீதியாக வெற்றியடைவது எந்த அளவுக்கு சாத்தியம் என்றும் குழம்பிப்போக ஆரம்பித்திருக்கிறார்களாம் தமிழ் சினிமா தரப்பினர்.
*S. G. R