நேற்று நள்ளிரவுடன் இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஆட்சிகாலம் இன்னும் 10 மாதங்கள் மீதமிருக்கின்ற நிலையில், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும்.
ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்ட புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
எனினும் இந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து புதிய நாடாளுமன்றத்தை உருவாக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட தரப்பினால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞானபத்திலும் 100 நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், பல்வேறு சட்ட மூலங்களை நிறைவேற்றுக் கொள்ளும் பொருட்டு இதற்கு காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்படும்.
இதன்படி ஜுலை மாதம் 6ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் வேட்பு மனுக்கள் கோரப்படும்.
ஆகஸ்ட் 17ம் திகதி தேர்தல் நடத்தப்படும்.
இறதியாக கடந்த 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
இதன் போது வழங்கப்பட்டிருந்த வாக்குகளில் 60.33 சதவீதத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.
இதன்படி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் உள்ளடங்களாக 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த கட்சி பெற்றிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களை மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.
இந்த பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக இலங்கை தமிழரசு கட்சி 14 ஆசனங்களையும், ஜனநாயக கட்சி 7 ஆசனங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.