இன்று சிறுவர் தினம். "இந்த உலகத்தை அழகாக்கும் குழந்தைகளுக்கான சிநேகபூர்வமான சூழல்" என்னும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் அக்டோபர் 1இல் கொண்டாடப்பட்டாலும், உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறான திகதிகளில் கொண்டாடப்படுகின்றது. முதன்முதலாக இது சிறுவர்களுடைய நலநோன்பிற்காக, உலக மாநாட்டில் 1925ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டாலும், உலகளாவிய ரீதியாக 1954இல் ஒரு பொருத்தமான நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இன்றைய தினத்தில், என்னென்ன வழிகளில் நாமும் இதில் பங்காளராகப்போகின்றோம்...???
இலங்கையில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டாயக்கல்வி சட்டமாக்கப்பட்டுள்ளது; ஆனால் இது எல்லா இடங்களிலும் சரிவர அமுலாக்கப்படுகின்றதா, என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது.
குடும்ப வறுமை, பெற்றோர்களின் கல்வி மீதான அக்கறையீனம் காரணமாக, பல சிறுவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, கட்டாய தொழில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. "1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, சிறுவர் பாதுகாப்புச் சட்டமும்" "2006 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, சிறுவர் பாதுகாப்புத் திருத்தச் சட்டமும்", 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை வேலைக்கமர்த்துவதைத் தடைசெய்துள்ளன; இதில் 51 வகையான தொழில்களில், 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அமர்த்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது; அவை உயிர் பாதுகாப்பற்ற, அபாயகரமான தொழில்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த, தமிழ் பிள்ளைகளே அதிகளவில் சிறுவர் தொழிலாளர்களாக இணைத்துக்கொள்ளப்படுவதாக, அரசசார்பற்ற நிறுவனங்களை மேற்கோளாகக் கொண்டு தகவல்கள் வெளிவருகின்றன. கொடிய யுத்தம் காரணமாக, பெற்றோரை/ தந்தையை இழந்திருத்தல், பெற்றோரின் குடும்ப வருமானத்தைக்கொண்டு வாழ்க்கைச்செலவை ஈடுகட்ட முடியாமை, குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்த முடியுமென்ற தந்திர யோசனைகள் போன்றவற்றால் இவர்கள் வேலையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இதில் தரகர்களின் பங்கும் குறிப்பிடத்தக்களவு இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
சிறுவர் தொழில் வழங்குனர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறைத் தண்டனையும் பெருந்தொகைப் பணமும் அபராதமாக விதிக்கப்படுவதால், பிள்ளைகளின் வயதை 18 எனக்கூறுமாறு இத்தொழில் வழங்குனர்கள் பிள்ளைகளை நிர்ப்பந்திக்கின்றனர்; இதற்காக போலி அடையாள அட்டை, பிறப்பத்தாட்சிப்பத்திரம் என்பவற்றையும் தயார் செய்கின்றனர்.
சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதும் தற்போது மலிந்து போயுள்ளது. வயது வேறுபாடின்றி சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். உதாரணத்துக்கு அண்மைய நாட்களிலிடம்பெற்ற கொட்டதெனியாவ சிறுமி கொலை, புங்குடுதீவு மாணவி படுகொலை, அத்துருகிரிய-பனாகொடை 10 வயதுச் சிறுவன் படுகொலை எனக்கூறிக்கொண்டே போகலாம். இதில் கொடுமை என்னவென்றால் வேலியே பயிரை மேய்வது போல தந்தை, தமையன், ஆசிரியர்கள் போன்றோரால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாகும். தமது தந்தையின், தமையனின் குழந்தைகளுக்குத் தாயான சிறுமிகளும் நமது நாட்டிலுள்ளனர்.

போதையும் சிறுவர்களை சீரழிக்கும் மிக முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ளது. வருங்கால விற்பனையைக் கருத்திற்கொண்டு இலவசமாக சிறுவர்களுக்கு போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விநியோகித்தல், 18 வயதுக்குக் குறைந்தவர்களால் புகையிலைப் பொருட்கள் விநியோகிக்கப்படல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
இவற்றைத்தடுக்க அரசாங்கமும் நீதித்துறையும் முயற்சிகளை மேற்கொள்கின்ற போதும் குற்றங்கள் நடைபெற்ற பின்னர்தான் குற்றவாளிகளைத் தண்டிக்க முடிகின்றது. ஆனால் குற்றங்கள் நடைபெற முன்னர் தடுக்க முடிவதில்லை; இதற்குக் காரணம் சமூகப் பிரசைகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காமையாகும்.
கட்டாயக்கல்வி வயதை 16 ஆக உயர்த்த, கல்வியமைச்சுடன் இணைந்து சிறுவர் அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு பலதரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
மக்களிடத்திலும், தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களிடத்திலும், ஏற்படுகின்ற விழிப்புணர்வினாலேயே குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான தகவல்கள் கிடைக்குமிடத்து 1929 என்ற இலக்கத்துக்கும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 0112778911 / 12 / 14 என்ற இலக்கங்களினுடாக சிறுவர்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பிலும், தகவல் தெரிவிப்பது நமது கடமையாகும்.
எமது விழிப்புணர்வினூடாக "இந்த உலகத்தை அழகாக்கும் குழந்தைகளுக்கான சிநேகபூர்வமான சூழலொன்றை உருவாக்கிக் கொடுப்போம், நாளைய சந்ததியைக் கட்டியெழுப்புவோம்".