“வெயில், அங்காடித் தெரு, அரவான்” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதிய படம் ‘காவியத்தலைவன்.’ ‘Boys’ படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். தமிழில், “காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா திரைப்படங்களைத் தொடர்ந்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காவியத் தலைவன்.’
“காளை, முனி, சக்கரக்கட்டி, பரதேசி” திரைப்படங்களில் நடித்த வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக பிரபல இந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனைக்கா சோட்டி நடிக்கிறார். மிக முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயனாக இருக்கும் பிருத்விராஜ் நடிக்கிறார். இவர் தமிழில் “மொழி, கனா கண்டேன், ராவணன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா” முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை, இணை கதாபாத்திரங்களில் நாசர், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, அழகி ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கும், பிற இயக்குனர்களுக்கும் அதிகம் இசையமைக்க ஒத்துக் கொள்ளாத, oscar நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு, இது நாட்டுப்புற இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென இசையமைக்க சம்மதித்ததோடு, தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.



















