2,453 Views
கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடித்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடினார்.
ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமை மற்றும் தலிபான்களின் தொடர் மிரட்டல்களை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் இங்கிலாந்து அரசின் உதவியோடு பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது மலாலாவின் வயது 15. மலாலாவைச் சுட்டுக் கொல்ல முயற்சித்தது தொடர்பாக 10 தலிபான் தீவிரவாதிகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் இராணுவம் கடந்த 2014-ல் கைது செய்தது.
இந்த நிலையில் மலாலாவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்கு தொடர்புடைய வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் கல்விக்கு ஆதரவாக, தீவிரவாதிகளை தனது எழுத்தின் மூலம் எதிர்த்த மலாலாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.