முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது ஆட்சிக்காலத்தின்போது ரில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர இந்தக்குற்றச்சாட்டை இன்று ஊடக சந்திப்பு ஒன்றின்போது சுமத்தியுள்ளார்
இது தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் தற்போது தகவல்களை திரட்டிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் உலகில் ஊழல் மிக்க தலைவர் என்பது தற்போது காரணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரால் திருடப்பட்டுள்ள சொத்துக்களை தேடி பிடிக்க நான்கு நாடுகளின் உதவி தற்போது கோரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேறு பெயர்களில் சம்பாதித்த பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாடுகளிலுள்ள புலனாய்வு தரப்பினரின் தகவல்கள்படி ராஜபக்ஷ குடும்பத்தினரின் சொத்து பெறுமதி 18 பில்லியன் டொலர்களாகும்.
அதாவது இது ரில்லியனில் 3.2 ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையை பொறுத்தவரையில் முதலாவது ரில்லியன் ரூபா பணக்காரர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் மங்கல சமரவீர குறிப்பிட்டார்.
18 பில்லியன் என்பது இலங்கையின் தேறிய தேசிய வருமானத்தில் நான்கில் ஒரு பங்காகும்.
எனவே தான் இந்த நாசகாரர்கள் மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் நாசக்காரர் என்பதுடன், ஐக்கிய தேசிய கட்சியிலும், ஜே வீ பியிலும் உடைவை ஏற்படுத்தினார்.
தற்போது, தாம் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிரிந்து நிற்பதற்கும் மஹிந்த ராஜபக்ஷ காரணமாக உள்ளார் என்றும் மங்கல சமரவீர குறிப்பிட்டார்.
தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு சில தரப்பினர் பகல் கனவை காண்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, வெட்கமில்லாமல் பிரதமர் பதவியையும் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருக்கிறார்.
தமது நண்பரான மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த நவம்பருடன் 70 வயதாகின்றது.
எனவே, பாட்டன்களை போல் வீட்டிலிருந்து புண்ணியத்தை தேட வேண்டும்.
எனினும், அவ்வாறு இருக்க முடியாமைக்கு அவர் மேற்கொண்ட கொள்ளைகளும், ஊழல்களுமே காரணமாகும்.
இந்த விடயங்கள் வெளியில் வருவதற்கு முன்னர் பதவிக்கு வந்துவிட அவர் முயற்சிக்கிறார்.
இது அவரின் உயிர் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டம் என அவர் நினைப்பதாகவும் மங்கல சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமலர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளார்கள்.
அத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஏற்படுத்துவதற்கும் தயாரிப்புக்கள் இடம் பெறுவதாக மங்கல குறிப்பிட்டார்.
20வது திருச்ச சட்டமூலமாக தேர்தல் முறை மாற்றப்படவிருப்பதை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை.
எனினும், அதில் சிறுபான்மை கட்சிகளின் நலன்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்படுவதாக மங்கல சமரவீர குறிப்பிட்டார்.
தாம் பிரதமர் எதிர்பார்பையோ அல்லது வேறு எதனையுமோ ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கோரவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராமயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளர் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியவர்கள் அது தொடர்பான கலந்துரையாடலை நடத்தும் தரப்பினரே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.