பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ மாரி’. படத்தை ராதிகா சரத்குமார், மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு இசை அனிருத்.
இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அடுத்த படமாக வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி 2’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பது முன்பே அறிவிக்கப்பட்டது. மேலும் மணிரத்னம் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதில் அதிகாரப்பூர்வமாக பிரபுசாலமன் படம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.
தற்போது வெகுநாட்களாக அறிவிக்கப்பட்டு அமைதியாகவே இருந்த வெற்றிமாறனின் படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ளார். ” விஐபி’ படக்குழுவின் பெயரிடப்படாத படத்தைத் தொடர்ந்து அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’வடசென்னை’ படத்தில் நடிக்க இருக்கிறேன்.இந்த படத்தின் கதை ’பொல்லாதவன்’ படத்தின் போதே முடிவானது. ஷூட்டிங் செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது.
சமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 2016ல் படம் வெளியாகும். மேலும் தகவல்கள் விரைவில்” என ட்வீட் செய்துள்ளார் தனுஷ். எனவே வேல்ராஜ் இயக்கும் படம் நிறைவையடுத்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
-கோடம்பாக்கக் குருவி-