இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும்.
மேகாலயா, ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட அப்துல் கலாம் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார்.
1998ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம், பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் இந்தியாவின்
அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 3வது குடியரசுத் தலைவராவர்.
ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் கலாம் மறைவையடுத்து இன்று இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்புக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை அவரது உடலம், டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15ஆம் திகதி ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ஜெனுலாபுதீன், ஒரு படகுக்குச் சொந்தக்காரர்.
அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை வீடுவீடாக விநியோகிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது.
இந்திய வான்படையின் போர் வானூர்தி ஓட்டுநராகவேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை,
1960ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.
பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980ஆம் ஆண்டு உந்துகனையை பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவித்தது.
1963ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர், அனைவராலும் இந்திய ராணுவ உந்துகனை படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் நாள் 2002ல் பதவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.
இவ்வாறான சிறப்புப்பெற்ற அப்துல் கலாம் என்ற தமிழர் இன்று உலகில் இருந்து பிரிந்துவிட்டார்.
எனினும் அவரது பணிகள் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.