இம்ரான்கான் ‘விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொலை முயற்சி திட்டத்தில் இம்ரான்கான் பலியாகி விடலாம் என்ற நிலையில் ரேஹம்மை அவர் விவகாரத்து செய்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அரசியல் அதிகாரத்தை பெறும்விதமாக இம்ரான்கானுக்கு மெல்ல மெல்ல சாகும் 'ஸ்லோ பொய்ஸன்' விஷத்தை ரேஹம் கொடுக்க விரும்பினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் செய்தியாளர் ஆரிப் நிஜாமி கூறுகையில், இம்ரான்கானுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்று ரேஹம் திட்டமிட்டு இருந்தார் என்பதையே உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன, இதுவே அவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
"ரேஹம் நோக்கங்கள் அனைத்தும் சரியானது கிடையாது என்று உளவுத்துறை அதிகாரிகள் இம்ரான்கானுக்கு அவரது நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இம்ரான்கானிடம் உள்ள அதிகாரத்தை பிடிப்பதற்கு, ரேஹம் விஷம் வைக்க முடியும் என்று உளவுத்துறை எச்சரிக்கையிட்டது," என்று பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள ஆரிப் நிஜாமி கூறியுள்ளார்.
இதற்கிடையே விவாகரத்துக்கு முன்னதாக தம்பதியினர் இடையே, தகராறு ஏற்பட்டதாகவும், இம்ரான்கானை அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனை இம்ரான்கான் கட்சியான ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ மறுத்துவிட்டது.
ரேஹம், இம்ரான்கானை அடிக்கவில்லை என்று ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ கட்சி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. “இம்ரான்கான் உடனான ரேஹத்தின் உறவானது பொய் மற்றும் ஏமாற்றத்தின் அடிப்படையிலானது. தனது கடந்த காலத்தை பற்றி இம்ரான்கானிடம் பொய்யான தகவலையே ரேஹம் தெரிவித்துள்ளார். கணவர் துன்புறுத்தியதாகவும் பெரும்பாலும் பொய்யே கூறி உள்ளார்,” என்றும் நிஜாமி கூறியுள்ளார். இதற்கிடையே, சில கட்சி தலைவர்களிடம் ரேஹம் பணம் வசூலித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.