இங்கிலாந்தின் போர்ட்க்குல்லிஷ் லீகல்ஸ் (Portcullis Legals) என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று அறிவித்துள்ளது.குறித்த நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால் அந்த நிறுவன பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதுமாத்திரமின்றி கடந்த வாரம்தான் அந்த நிறுவன பணியாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் சம்பள உயர்வு, 4 நாட்கள் வேலை, கூடிய விரைவில் போனஸ் என்று அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகளை குறித்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தநிலையில், இந்த முடிவால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அதனால் முன்பை விட உற்சாகமாக ஊழியர்கள் பணிகளைச் செய்வதாகவும், வாடிக்கையாளர்களும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சிறப்பான சேவைகளைப் பெறுவதாகக் கூறுவதாகவும் போர்ட்க்குல்லிஷ் லீகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து நாட்டின் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் தொடங்கப்பட்ட இந்த 4 நாள் வேலை திட்டம், மிகுந்த வெற்றியை பெற்றுத் தந்த நிலையில், தாமும் தமது நிறுவனத்தில் இந்த முறையை ஆரம்பித்ததாக குறித்த நிறுவன இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய திட்டத்தின் பிரகாரம் 5 மாத காலம் சோதனை நடைபெறும். இது வெற்றி பெற்றால் தொடர்ந்தும் இந்த வழக்கத்தை தாம் பின்பற்ற தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.