சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும், சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. படப்பிடிப்பின்போது தன்னுடைய சைக்கிளை உடனே எடுத்துச்செல்வார். இடைவெளியின் போது அதை ஓட்டி ஊர் சுற்றி வருவார்.
சைக்கிள் ஓட்டுதலை சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா, தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது சர்வதேச சைக்கிள் பந்தய அணி 'ரைடர்ஸ்' லோகோவை வெளியிட்டுள்ளார்.
தனது முதல் சர்வேதேச போட்டியினைப் பற்றி குறிப்பிடுகையில் ‘‘வாடேர்ன் ருன்டன் ரேஸ் என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டாலா என்ற ஊரில் நடந்து வருகிறது இப்பந்தயம். தொடர்ந்து 50-வது வருடமாக இந்த போட்டி நடந்து வருகிறது. அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.
ஆரோக்கியமான முயற்சிதான் ஆர்யா, வாழ்த்துக்கள்..!!
-கோடம்பாக்கக் குருவி-