2,144 Views
நாசாவின் விண் தொலைக்காட்டியான கெப்ளர் இதனைக் கண்டுபிடித்துள்ளது.
கெப்ளர் 452b என அழைக்கப்படும் மேற்படி கிரகமானது பூமியின் பல்வேறு பண்புகளை ஒத்த தாக காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது உயிர்வாழ்தல் சாத்தியமான வலயத்துக்குள் இருப்பதாகவும் , இதன் தட்ப வெப்பநிலையானது நில மேற்பரப்பில் நீரை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஏதுவானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கெப்ளர் 452b ஆனது Earth 2.0 அதாவது பூமி 2.0 என நாசாவால் அழைக்கப்படுகின்றது.
மேற்படி கோளானது தனது நட்சத்திரத்திலிருந்து சுழலும் தொலைவானது, பூமி தனது நட்சத்திலிருந்து சுழலும் தூரத்துக்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
கெப்ளர் 452b உயிர்வாழ்வுக்கு ஏதுவான வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய மற்றும் சூரியனை ஒத்த G-2 வகை நட்சத்திரத்தைக் கொண்ட கோள் என தெரிவிக்கப்படுகின்றது.
சூரியனைப் போன்ற ஆனால் 4 % பெரிய , 10% அதிக பிரகாசமான நட்சத்திரத்தை கெப்ளர் 452b சுழன்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த நட்சத்திரத்தை முழுமையாக சுழன்று வர கெப்ளர் 452b கோளானது 385 நாட்களை எடுப்பதாகவும் இது பூமியின் சுழற்சிக்காலத்தை விட 5% அதிகமானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் திணிவு தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும் பூமியை விட 5 மடங்கு அதிகம் இருக்குமெனவும் ஊகிக்கப்படுகின்றது.
இதன் மேற்பரப்பு பாறைகளை கொண்டுள்ளதாகவும் எனவே எரிமலையை ஒத்த செயற்பாடுகள் அங்கு காணப்படலாம் எனவும் இதன் ஈர்ப்பு சக்தியானது பூமியை விட இருமடங்காக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பூமியை விட 60 % பெரிய கோள் எனவும் பூமியிலிருந்து 1400 ஒளி வருடங்கள் தொலைவில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இது தவிர இக்கோள் மற்றும் அது சுற்றி வரும் நட்சத்திரம் ஆகியன சுமார் 6 பில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் இது சூரியனை விட 1.5 பில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா என தெரியாத போதிலும் ,அங்கு நிலவுவதாக கூறப்படும் சூழலியல் காரணிகள் உயிர் வாழ்தலுக்கு ஏதுவானதென தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் உயிர் வாழ்தலுக்கு சாத்தியமான வலையத்தில் மேலும் 11 கோள்களையும் கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.
கெப்ளர் 452b கோளானது அதன் நட்சத்திரத்திடமிருந்து, பூமி சூரியனிடமிருந்து பெற்றுக்கொள்வதை விட 10 % அதிக சக்தியை பெற்றுக்கொள்வதாக , நாசாவின் ஏம்ஸ் ஆராய்சி மையத்தில் கெப்ளர் தொலைக்காட்டியின் தரவுகளை ஆராயும் குழுவின் தலைவர் ஜொன் ஜென்கின்ஸ் தெரிவிக்கின்றார்.
இது அங்குள்ள நீரை விரைவாக ஆவியாக்கிவருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேபோல் பூமி இன்னும் 1.5 பில்லியன் வருடங்களில் 10 % அதிக சக்தியை சூரியனிடமிருந்து பெறுமெனவும் எனவே இதனை பூமியின் எதிர்கால மாதிரியாக கொள்ளமுடியுமெனவும் ஜொன் ஜென்கின்ஸ் தெரிவிக்கின்றார்.
