5,505 Views
'வாலு' என பெயர் வைப்பதற்கு பதிலாக 'புலி வால்' என பெயரிட்டிருந்தால் இப்படத்துக்கு பொருத்தமாக இருந்திருக்கும், அந்த அளவுக்கு நீண்டு கொண்டே போனது இதன் வெளியீட்டுத் தினம்.
சிம்புவையும் , வாலுவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் புரட்டி எடுத்தார்கள்.
'மீம்' உருவாக்குபவர்களுக்கு விஜயகாந்தை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவுக்கு சிம்புவும் பிடித்து போனார். சிம்புவும் , வாலு உம் இன்றி மீம் இல்லை என சொல்லும் அளவுக்கு நிரம்பி வழிந்தது இணையம்.
விஸ்வரூப சிக்கல்கள் என்பதை விட விஸ்வரூபம் திரைப்படம் சந்தித்த சிக்கல்களுக்கு இணையான பிரச்சினைகளை சந்தித்திருந்தார் சிம்பு.
லிட்டில் சூப்பர் ஸ்டார் என கோலிவுட்டை வலம் வந்த சிம்பு அடையாளம் தெரியாமல் போகும் அளவுக்கு அவருக்கு எதிராக சதி நடப்பதாக அடுக்கு வசன மன்னனும் , அவரது தந்தையுமான டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள சிம்பும் , டி.ராஜேந்தரும் கடுமையாக போராடினார்கள். அவரது போராட்ட த்தில் ஹன்சிகா தொலைந்து போனது வேறு கதை.
சிக்கல்களுக்கு இடையில் நடிகர் விஜயும் சற்று விளம்பரத்துடன் உதவி புரியவே வாலு சிக்கல் ஓரளவு சரியானது.
செய்யும் உதவியை உரசிப் பார்ப்பது வழக்கம் என்பதால் , தனது சகோதரன் விக்ராந்துக்கு உதவாத விஜய் , சிம்புக்கு ஏன் உதவுகின்றார் என கேள்விகளும் எழுந்தன.
அதேபோல் சிம்பு தீவிரமாக நேசிக்கும் அஜித்தும் ஏன் உதவவில்லை என கேள்விகள் எழுந்தன.
அது சினிமா , அரசியல் , சினிமாவுக்குள் அரசியல் , அரசியலில் சினிமா என இடியாப்பச் சிக்கல் போன்றதென்பதால் விடயத்துக்கு வருவோம்.
ஆம் , சிம்புவின் வாலு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடைசி நேர குளறுபடிகளையும் தாண்டி படம் திரைக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாலு திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் சிம்புவின் ரசிகர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 3 ஆண்டுகளின் பின்னர் சிம்புவின் படம் வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சிம்பும் படத்தை ரசிகர்களுடன் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.