புதியதோர் கதைக்களத்தில் மணிரத்னம் - மீண்டும் இணையும் கூட்டணி
மணிரத்னத்தின் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிகண்ட திரைப்படம் ஓகே கண்மணி. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார் மணிரத்னம். வித்தியாசமான ஒரு கதைக்கருவுடன், பிரபலமான பல நட்சத்திரக் கூட்டத்தை இணைத்துக் கொண்டு மீண்டும் தமிழ்த் திரைக்களம் புகுந்திருக்கிறார் மணி.
வளர்ந்துகொண்டிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் துல்கர்சல்மான் இருவரும் கதையின் நாயகர்களாகவும், ஸ்ருதிஹாசனுடன் கீர்த்திசுரேஷும் இணைந்து நாயகிகளாக தோன்றவிருக்கிறார்களாம். இந்த வருட இறுதிக்குள் இந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கோடம்பாக்கம் சொல்கின்றது. மணிரத்னத்தின் படம் என்றாலே இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பது எழுதப்படாத விதி. அந்த விதி இந்தப்படத்திற்கும் போருந்துகின்றதாம் என்பது இசை ரசிகர்களுக்கு சிறப்பான சேதி.
இதேவேளை, பிரபல ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் இந்தப்படத்தை ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.முதல் முறையாக மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவிருக்கும் இவர் தசாவதாரம், வேட்டையாடுவிளையாடு, அந்நியன் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தற்பொழுது இந்திப் படங்களில் பிஸியான ஒளிப்பதிவாளர் இவர் என்பது மேலதிக கொசுறுத் தகவல்.
இந்தநிலையில், ரவிவர்மன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இந்தப்புதிய படத்தில், வித்தியாசமான சிந்தனையிலான காட்சியமைப்பு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று அடித்துச் சொல்கின்றது தமிழ்த் திரையுலகு.
*S. G. R