தேசிய அரசாங்கத்தை உருவாக்க சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை ஒன்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு எவ்வாறான ஒத்துழைப்புகளை சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளது.
இதற்கு புறம்பாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் யாரும் செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.