10,780 Views
பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதான அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்த போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களான ரவுப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், பி.திகாம்பரம், பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோகணேசன் ஆகிய அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அத்துடன். அத்துரலியே ரத்தன தேரர், ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டமை விசேடம்சமாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, நல்லாட்சியுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சகோதரத்துவத்துடன் கரம்கொடுக்கும் என தெரிவித்தார்.
கடந்த கால அரசியல் செயற்பாடுகளின் ஊடாக தாம் பலவாறான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் இறுதி நாளன்று இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்து வருமாறு:
"ஜனாதிபத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாள் ஜனவரி 5. நான் மாத்தறை , காலி , களுத்தறை , மொரடுவை கூட்டங்களை நிறைவுசெய்து மருதானை கூட்ட த்திற்கு வருகை தர இருந்தேன். எனினும் எனது பாதுகாப்பு ஊழியர்கள் என்னை எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு கொண்டு சென்றனர். நான் மருதானை கூட்ட த்திற்கு செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எனது சாரதியையும் அனுப்பி விட்டனர். வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். இதன்போது எனக்கு அழைப்பை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க , மருதானை கூட்ட த்துக்கு வரவில்லையா? எனக் கேட்டார்.
நான் எனக்கு வருவதற்கு வழியில்லை எனவும் சாரதியும் சென்று விட்டார் எனக் கூறினேன். யாரும் தேவையில்லை , நீங்கள் அங்கேயே இருங்கள் நான் வருகின்றேன் என அவர் கூறினார். சிறிது நேரத்தில் அவர் வந்து என்னை மருதானை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு கண்ணாடி பாதுகாப்புக்குள் வைத்து என்னை உரையாற்ற வைத்தார்.
பின்னர் சுமார் 10,000 இற்கும் அதிகமானோர் இருந்த அக்கூட்டத்தினுள் ரணில் விக்கிரசிங்க சென்றார். கூட்டத்தில் அங்கும், இங்குமாக சென்ற அவர் எனக்கு காட்டியது எமது கூட்டத்தில் எவ்வித ஆபத்தும் இல்லையென்பதும், அதன் பொறுப்பை தான் ஏற்பதுவமேயாகும். அன்று 20-25 இளைஞரைப் போல ரணில் நடந்துகொண்டார்" என்றார்.