செப்டெம்பர் 28 இல் பூமி அழிகிறதா??
இம்மாதம் 28 ஆந் திகதியுடன் பூமி அழியப்போவதாக எல்லா இடங்களிலும் எல்லோராலும் பேசப்படுகின்றது. அப்படி என்னதான் ஆபத்து பூமிக்கு நிகழப்போகின்றது என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகின்றது.
பூமியை நோக்கி பல கிலோமீட்டர் அகலங்கொண்ட விண்கல்லொன்று வந்து கொண்டிருப்பதாகவும் செப்.28 இல் பூமியை அது தாக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களின் ஊகம், நம்பிக்கை, ஜோதிடம் என்பவற்றைக்கடந்த விண்வெளி ஆய்வு என்றபடியால் மக்களால் இக்கருத்தை நிராகரிக்க முடியாதுள்ளது; நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது.
இது போலத்தான் 2012 டிசம்பருடன் பூமி அழியுமென்று எல்லோரும் பேசி பயந்து கொண்டனர், தென்னமெரிக்க பகுதியிலே வாழ்ந்த மாயன் இனத்தவர்களை மேற்கோள்காட்டி அவர்களுடைய அறிவுத்திறனையும் போற்றி அவர்களின் கணிப்புகளும் ஆய்வுகளும் சரியாக இருந்ததாகவும் எனவே அவர்கள் உருவாக்கிய நாட்காட்டி 2012 டிசம்பருடன் முடிவடைவதால் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள், பயப்படுத்தினார்கள்.
"2012" என்று படமெடுத்து அதனால் பலகோடி வசூலும் பெற்றனர். ஆனால் அவ்வாறெதுவும் நடக்கவில்லை; எனவே செப்டம்பர் - 2015 என்பதும் அதுபோலத்தானா???
எரிகற்கள் / விண்கற்கள் பூமியை மோதுவதான தகவலும் சம்பவமும் ஒன்றும் புதிதல்ல. ரஷ்யாவின் “லெனின்கிராட்” பகுதியில் விண்கல்லொன்று மோதியதால் பல மீட்டர் பிரதேசம் அழிவுக்குள்ளானது. இதே போல அமெரிக்காவின் “அரிசோனா” மாநிலத்திலும் விண்கல் விழுந்து உருவாகிய பாரிய குழி இன்றும் சான்றாக உள்ளது.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வால் நட்சத்திரமொன்று பூமியை மோதியதால் ஏற்பட்ட தூசிப்படை, பூமியை பல மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைப்பதிலிருந்து தடுத்ததால் தாவரங்கள் காய்ந்து, உணவின்றி உயிரினங்களும் அழிந்து போயின; இதனால் தான் டைனோசர் என்னும் ராட்சத உயிரினமும் அழிந்து போனதாக நம்பப்படுகிறது.
230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் பூமி மீது வால் நட்சத்திரமொன்று மோதியதால் பல தாவரங்களும், உயிரினங்களும் அழிவடைந்ததாகவும், எஞ்சிய உயிரினங்களே பெருக்கமடைந்து பூமியை நிறைத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 2012, செப்டம்பர் 2015 களுக்கு மேலதிகமாக உலகை அச்சுறுத்தும், அழிவுக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. 26 மில்லியன் ஆண்டுக்களுக்கொருமுறை பூமியை வால் நட்சத்திரங்கள் தாக்குமெனவும், 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி தாக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 13 மில்லியன் ஆண்டுகளில் மீண்டும் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.
2020 ஆம் ஆண்டு சூரியப்புயலால் பூமிக்கு பாதிப்பேற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2032 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 இல் 1300 அடி அகலங்கொண்ட இராட்சத விண்கல் பூமியைத் தாக்குமென உக்ரைன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்கல்லுக்கு 2013 TV135 என பெயரிட்டுள்ளனர்.
இதேபோல 2007 VK184 என்ற பெயர் கொண்ட 130 மீட்டர் அகலங்கொண்ட விண்கல்லும் விண்வெளியில் சுற்றிவருவதாகவும் இதுவும் பூமியை தாக்கும் அபாயமிருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 500 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் செம்பூத நட்சத்திரமாக மாறி அருகிலுள்ள கோள்களை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் போது பூமியும் ஈர்க்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் செப்டம்பர் 28 இல் அவ்வாறான விண்கல்லோ வால் நட்சத்திரமோ மோதுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் மோதினாலும் மிகப்பெரிய சேதமேற்பட வாய்ப்பில்லையெனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை நிம்மதியான செய்தியாக அமைந்திருக்கும் எனலாம் .