234 உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாக விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு எதிராக, எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
3 மாநகரசபைகள், 30 நகர சபைகள் மற்றும் 201 பிரதேச சபைகள் என்பவற்றின் ஆட்சி காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.
இதன்அடிப்படையில் மாநகர சபைகளின் நிர்வாகம் அவற்றின் ஆணையாளரிடமும், நகர சபைகளின் நிர்வாகம் அவற்றின் செயலாளரிடமும் கையளிக்கப்படும்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 17ம் திகதியுடன் ஆட்சி காலம் நிறைவடைந்த 9 உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகம் ஆணையாளரின் கீழ் இடம்பெறுகின்றன.
அத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதியுடன் ஆட்சி காலம் நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்கள் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதே மாதம் 31ம் திகதி ஆட்சி காலம் நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை.
நீதிமன்ற வழக்கின்ற காரணமாக அங்கு தேர்தல் நடைபெறாதுள்ளது.
இதேநேரம் எதிர்வரும் ஜுலை மாதம் 31ம் திகதியுடன் 65 உள்ளுராட்சி மன்றங்களினும், ஒக்டோபர் 16ம் திகதியுடன் 21 உள்ளுராட்சி மன்றங்களினும், 31ம் திகதியுடன் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆட்சி காலம் நிறைவுக்கு வருகிறது.
இந்த நிலையில் ஆட்சிகாலம் நிறைவடையும் 335 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் பொருட்டே, காலாவதியாகின்ற உள்ளுராட்சி மன்றங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படுவதாக அரச நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.