அதிகமான வெப்பம் நிலவும் காலங்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமன்றி பெரும்பாலானவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடானது ஏற்படுகிறது.
எமது உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவைவிட உடலின் உள்ளே செல்லும் நீரின் அளவு குறைவடைவதே நீர்ச்சத்துக் குறைபாடாகும்.
எனவே, இது குறித்து அனைவரும் அவதானமாக இருப்பது அவசியம் என மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர். ஏனெனில், உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செல்களும் சரியாக செயல்பட நீர் மிக மிக அவசியமாகும்.
ஆகவே, உடலில் நீரின் அளவு குறைவடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதனை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்...
● அடிக்கடி தாகம் ஏற்படல்.
● வாய் மற்றும் உதடுகள் உலர்ந்து காணப்படுதல்.
● தலை சுற்றல், சோர்வு, பலவீனம், தலைவலி என்பன ஏற்படல்.
● கண்கள் உள்ளே சென்றிருப்பது போல் காட்சியளித்தல்.
● சிறுநீரின் அளவு குறைதல் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்.
எனவே, இவ்வாறான ஆபத்து நிலைமைகளில் இருந்து எமை நாம் பாதுகாத்துக் கொள்ள கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்...
● தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்.
● கோடை காலங்களில் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல்.
● தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தோடம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணுதல்
● அதிக வியர்வை ஏற்படும் சூழலில் குளிர்ச்சியான திரவங்களை எடுத்துக் கொள்ளல்.
அலட்சியமின்றி மேல் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உடலில் நீரின் அளவை சீராகப் பேணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.