இளசுகள், பெரிசுகள், இசைக் காதலர்கள், கலைஞர்கள் என அனைவரையும் தனது இசையாலும் குரலாலும் கட்டிப்போட்டவர் இசைஞானியே.
அப்படிப்பட்ட இசை வித்துவானின் "இளையராஜா 75 " நிகழ்ச்சி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் கடந்த மாதம் நடைபெற்றது. இந்தநிகழ்வை நேரிலும் தொலைக்காட்சியிலும் லைவ் வீடியோக்கள் மூலமாகவும் மிஸ் பண்ணாமல் இசை தாகத்தை தீர்த்தவர்கள் லட்சம் பேர்.
இந்தநிலையில், பிரபல இந்தியத் தொலைக்காட்சி ஒன்று நேற்று இளையராஜா 75தை ஒளிபரப்பு செய்தது. அதில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோஹினியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோஹினி, மேடையில் நின்ற இயக்குனர் சங்கரிடம் நீங்களும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷனையும் பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆவல் இருந்திருக்கும்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மேடையில் ஹார்மோனியப் பெட்டியுடன் நின்ற இசைஞானி “இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா... இப்படி கேட்கக்கூடாது. நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு?” என நேருக்கு நேர் கேட்டுவிட்டார்.
சூழ்நிலை தவறாக போகிறது என்று உணர்ந்த ரோஹினி “இல்ல... இல்ல... அப்படி இல்ல சார்...” என்கிறார். இதற்கு, “ஐ டோன்ட் லைக் திஸ். இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்குற ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரைப்போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற?" என இளையராஜா சீரியஸாக பதில் கொடுக்கிறார்.
அவரது பேரையும் புகழையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற கொண்டாட்டத்திற்குரிய அந்த நிகழ்ச்சி, சற்று சங்கடத்துடனேயே அந்த நிமிடங்களை கடத்தியது. இந்த சம்பாஷணையை பார்த்த பலரும், இசைஞானி இளையராஜா இப்படி நடந்து கொண்டமை குறித்து, தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள்