ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் அவர்களது இனக்குழுமம் சார்ந்து சமய, கலாசார அடிப்படையில் உடை, உணவு போன்ற விடயங்களில் தனித்தன்மை பேணப்படுகின்றது. சில வேளைகளில் அவை மூட நம்பிக்கை அடிப்படையில் அமைந்துவிடுகின்றன. அவ்வாறான வழிமுறைகளை பின்பற்றும்போது சில வேளைகளில் அவை உயிருக்கே உலை வைத்துவிடுகின்றன.
மங்கோலியா நாட்டில் வாழும் ஒரு இனக்குழுமத்தினர் மத்தியில் உண்ணும் உணவு தொடர்பிலான ஒருவகையான மூடநம்பிக்கை இன்றும் பின்பற்றப்பட்டுவருகின்றது. அதாவது, நமது சுற்றுச்சூழலில் அடிக்கடி நாம் பார்க்கின்ற விலங்கான அணிலை பிடித்துக் கொன்று அதன் இறைச்சியை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் குறித்த இனக்குழுமத்தினர்.
இந்த இனக்குழுமத்தினர் மங்கோலியா நாட்டினதும் ரஷ்யாவினதும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சகானூர் என்ற நகரப்பகுதியிலும் வசித்து வருகின்ற நிலையில், அங்கு வாழ்ந்த ஒரு தம்பதியினர் அணில் இறைச்சியை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு உடல் வலிமையை கூட்ட முடியும் என்ற மூட நம்பிக்கைக்குள் தள்ளப்பட்டு தமது உயிரை விட்ட சோகம் நடந்தேறியுள்ளது.
மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை கணவன் மனைவி ஆகிய இருவரும் சாப்பிட்டனராம். அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் உண்டான உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் இருவருக்கும் எலிக்காய்ச்சல் எனப்படும் பிளேக் நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறு உண்டான பிளேக் நோய்க்கான தீவிர சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்பட்டும், அணில் இறைச்சியை சமைக்காமல் பச்சையாக உண்ட குறித்த தம்பதிகளில் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் உயிரை இழந்த நிலையில், தொடர்ந்து வழங்கப்பட்ட சிகிச்சை மனைவிக்கும் பயனளிக்காத நிலையில் கடந்த முதலாம் திகதி மனைவியும் உயிரைப் பறிகொடுத்த துன்பகரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
நான்கு குழந்தைகளுடன் கூடிய அழகான குடும்பமாக வாழ்ந்த இந்த தம்பதி மூட நம்பிக்கைக்கு ஆட்பட்டு உயிரை இழந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.