சில காலமாக நடிகர் சூர்யாவின் படங்கள் ரசிகர்களை அவ்வளவாகக் கவராத நிலையில், எதிர்வரும் 31ம் திகதி திரை காணவிருக்கும் "NGK" திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தலுக்கானதும், தொடர்ந்தும் ரசிகர்களை தன்னுடன் தக்கவைக்கும் எண்ணத்திலுமாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேக பக்கத்தின் மூலமாக அண்மையில் ரசிகர்களை சந்தித்திருந்தார் நடிகர் சூர்யா. அந்தவேளையில், தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தவருமான சுரேஷ் ரெய்னாவும் ட்விட்டரில் நடிகர் சூர்யாவுடன் கேள்வி பதிலில் ஈடுபட்டிருந்ததோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்...? என்று சுரேஷ் ரெய்னா கேட்டதற்கு பதில் வழங்கிய நடிகர் சூர்யா, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை பிடிக்கும். அத்துடன், சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.
அதேவேளை, உங்கள் மனைவி ஜோதிகா மற்றும் தம்பி கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்வி ரசிகர் ஒருவரால் கேட்கப்பட்டது. அதற்க்கு சூர்யா பதில் கூறுகையில், "இன்றுதான் ஒரு கதை கேட்டேன். நன்றாக இருக்கிறது. அது அமைந்தால் ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று தம்பி கார்த்தியுடனும் சேர்ந்து நடிக்க ஆசைதான். அதற்கான நேரம் காலம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்" எனக் கூறி கேள்வி கேட்ட ரசிகரை மகிழ்வித்தார் நடிகர் சூர்யா.