சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த இடைவிடாத மழை எதிர்வரும் செய்வாய் கிழமை வரை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இருநாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, அம்மாகாணத்துக்கு உட்பட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
இதன் காரணமாக சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலபரப்பில் இருந்த பயிர்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இவை மாத்திரமன்றி, ஜியாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட 23 மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தினால் 58 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், சுமார் 100 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதிகளை வெள்ளநீர் அரித்துச் சென்றதால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு சுமார் 10 கோடி அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் திறக்கப்படாததால் போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சுமார் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.