26,052 Views
"புலி"யால் அதிருப்தியில் விஜய் - வேதனையில் தயாரிப்பாளர்
இளையதளபதி விஜய் நடிப்பில் தற்போது வேக வேகமாகவும் பிரம்மாண்டமாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது "புலி". இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், காட்சிகளை பிரம்மாண்டப்படுத்தும் கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடு ஒன்றில் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகின்றன.
இயக்குனர் சிம்புதேவனின் இயக்கத்தில் சரித்திரகால படமாக உருவாகும் "புலி"யில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி,சுதீப் ஆகியோர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான காட்சிகள் அனைத்துமே கிராபிக்ஸ் மூலமே பிரமாண்டப்படுத்தப்படுகின்றது. இந்தநிலையில், படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகளுக்காக அனுப்பப்பட்ட சில காட்சிகள், அந்தப்பணி நிறைவடைந்து திரும்பி வந்துள்ள நிலையில் அவை நம்ம இளையதளபதியிடம் போட்டுக்காட்டப்பட்டிருக்கின்றதாம்.
இவ்வாறு விஜய்யிடம் போட்டுக்காட்டப்பட்ட, கிராபிக்ஸ் பணிகள் முற்றாக நிறைவடைந்த காட்சிகளில் எதிர்பார்த்தளவு போதுமான பிரம்மாண்டம் இல்லை என்றும், இதனால் நம்ம இளையதளபதிக்கு சில காட்சிகளில் திருப்தி இல்லையென்றும் செய்திகள் வெளியாகின்றன.
இது இப்படியிருக்க, அண்மையில் ராஜமௌலியின் இயக்கத்தில் பாஹுபலி படம் வெளிவந்து பிரமாண்டத்தில் அனைவரையும் விழிவிரிய வைத்திருந்தது. அந்த பாஹுபலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை குறிப்பிட்டு காட்டிய இளையதளபதி, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. "பாஹுபலி"யை விட பல மடங்கு சிறப்பாக கிராபிக்ஸ் பண்ணும்படியும், பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும்படியும் கூறியிருக்கிறாராம்.
நிலைமை இப்படியிருக்க, விஜய்யின் அதிருப்தியை புரிந்துகொண்ட படக்குழுவும் குறிப்பிட்ட சில காட்சிகளை மீண்டும் கிராபிக்ஸில் பிரம்மாண்டப்படுத்துவதற்காக அனுப்பியிருக்கிறார்களாம். அதனால் விஜய்யும் அமைதியடைந்திருக்கிறார். ஆனால் "புலி" படத்தின் தயாரிப்பாளர்தான், இன்னும் எத்தனைகோடிகள் செலவாகப்போகின்றதோ என்கின்ற ஏக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேதனையில் வேகத் தொடங்கிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம்.
*S. G. R