இன்று சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும்.
White Cane Safety Day
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளைப் பிரம்பு கண்பார்வை அற்றவர்களின் அடையாளச் சின்னம் எனப் பிரகடனம் செய்யப்பட்டதுடன் இதற்கான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
உலகெங்கும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான விழிப்புலன் அற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடனும், மக்களின் கவனத்தை ஈர்த்து சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் நினைவுகூரப்படுகிறது.
1969ஆம் ஆண்டு சர்வதேச விழிப்புலனற்றோர் சம்மேளனம் கொழும்பில் நடத்திய சர்வதேச மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளிவிளக்காக வெண் பிரம்பு கருதப்படுகிறது. அவர்களின் வழிநடைக்கான ஊன்றுகோலாகவும், உதவு சாதனமாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு விளங்குகின்றது.
“கண்ணுடையோர் என்போர் கற்றோர்,முகத்திரண்டு புண் உடையார் கல்லாதவர்”என கண்ணுடையவர்கள் எல்லோரும் கற்றோராகவும், கல்வி கற்காதவர்களை முகத்தில் இரண்டு புண்களை உடையவர்கள் எனவும் குறட்பாவில் வள்ளுவர் சொல்லிச் சென்றார். எனினும், வள்ளுவர் இங்கு கூறிச் சென்றது கல்வி அறிவு பெறாதவர்களையே.
உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு. அனுபவம். ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் ஈடேறி வருவதை நாம் காண்கின்றோம்.
இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.
![]()

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே. இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். இல்லாவிடில் விபத்துக்கள், நோய்கள் காரணமாகவும் அமையலாம்.
நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.
வெள்ளைப் பிரம்பு தினம்
![]()

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இந்த வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது எனினும், மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
‘வெள்ளைப் பிரம்பு” உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.வெள்ளைப்பிரம்பு தினத்தினை உலகமே கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர் ஜப்பானில் பிலபல்யமாக இருந்த வைத்தியர் கீய்(HEY) ஆவார்.
அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகறை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இந்தப் பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பு ஆகும்.
டாக்டர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்த்துவதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு சிறப்புப் பெற்றது.
வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர்கள். இவ்விழிப்புலனற்றோர், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும், அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை விழிப்புலுனற்றவர்களின் கையிலேயே துணையாகக் கொடுத்து எவரது உதவியுமின்றி அவர்கள் தாமாகவே நகருவதற்கு இந்த வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். வெள்ளைப்பிரம்பிற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.
முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்
கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
******
இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில், ஒரு கண் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து, மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில், வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு, இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.
*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல், வறட்சி, வீக்கம் அல்லது புண், வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது, தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;
*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில், ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில், பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் – வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தொழிற்சாலைக் குப்பைகள், பாட்டரி அமிலம், விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள், வாணவேடிக்கை, UVB- கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது, சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.
*******
‘மயோபியா’ என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.
********
‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால், ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு, அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.