பெரும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது நடிகர் சங்க தேர்தல்.
நடிகர் சங்கத்தில் 3139 நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளநிலையில் 1824 நடிகர்கள் நேரடியாகவும், 783 பேர் தபால் மூலமாகவும் வாக்களிக்க, முதன் முறையாக 83% வாக்குப்பதிவுடன் நிறைவடைந்திருக்கின்றது தேர்தல். இந்த தேர்தலில் "பாண்டவர் அணி" எனப்படும் விஷால் அணியினர் வெற்றி பெற்று தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலைப்போன்று, ஒரு மாதமாத காலத்திற்கும் அதிகமாக தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலானது, இதுவரைக்கும் நடந்த நடிகர் சங்கத் தேர்தல்களை விட அனல்பறக்க வைத்திருந்தது என்றே சொல்லலாம். கடந்த மூன்று முறை நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமாரை எதிர்த்தே விஷாலின் "பாண்டவர் அணி"யினர் களம் இறங்கினர்.
இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பு சென்னை - மயிலாப்பூர் - ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பாடசாலை வளாகத்தில் காலை 07மணி தொடக்கம் மாலை 05மணி வரை நடந்தது. இந்தத் தேர்தலானது தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் 24 உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பதவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் சரத்குமார் தலைமையிலான அணி மற்றும் விஷால் தலைமையிலான "பாண்டவர்அணி"களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இவ்வாறு இடம்பெற்ற நடிகர் சங்க தேர்தலின் தலைவர் பதவிக்கான போட்டியில் மூன்று முறை தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் நாசர், சிவசாமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதில் சரத்குமார் மற்றும் நாசருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில், நாசருக்கு 1344 வாக்குகளும், சரத்குமாருக்கு 1235 வாக்குகளும், சிவசாமி என்பவருக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம் நாசர் 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பதில் விஷாலுக்கும், ராதாரவிக்கும் இடையே பெரும் இழுபரிநிலையே காணப்பட்டது. இறுதியில், விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நடிகர் ராதாரவி, தோல்வியை தலை வணங்கி ஏற்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலுக்கும் அவரது "பாண்டவர் அணி"க்கும் வாழ்த்துத் தெரிவிப்பதாகவும், இந்த வெற்றியானது அவர்களது உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி எனவும் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியிருக்கிறார்.
சங்கத்தின் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் போட்டியிட்டனர். இதில் கார்த்திக்கு 1493 வாக்குகளும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1080 வாக்குளும் கிடைத்தன. இதனடிப்படையில், நடிகர் கார்த்தி 413 வாக்குகளால் பொருளாளர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதேவேளை, துணைத்தலைவர் போட்டியில் "பாண்டவர் அணி"யின் கருணாஸ் - பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கருணாஸ் 1362 வாக்குகளையும், பொன்வண்ணன் 1235 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமார் 1115 வாக்குகளையும், சிம்பு 1107 வாக்குகளையும் பெற்று தோல்வியை எதிர்கொண்டனர்.
இது இப்படியிருக்க, 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான போட்டியில், "பாண்டவர் அணி" சார்பாக நடிகர்கள் நந்தா, குட்டி பத்மினி, கோவை சரளா, விக்னேஷ், பிரசன்னா, ரமணா, பூச்சி முருகன், ராஜேஷ், பசுபதி, சங்கீதா, சீனிவாச ரெட்டி, தளபதி ரமேஷ், ராஜேஸ், ஜூனியர் பாலையா, சிவகாமி, பிரகாஷ், பாலதண்டாயுதபானி, அயூப்கான், பிரேம்குமார், உதயா ஆகிய 20 பேர் தெரிவாகியுள்ளனர். சரத்குமார் அணியில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 4 பேர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னணி நட்சத்திரங்கள் தொடக்கம் புதுமுக நடிகர், நடிகைகள் வரை அனைவரும் வந்து வாக்களித்த தேர்தலாக அமைந்திருக்கின்றது இந்த நடிகர் சங்கத் தேர்தல். இருந்தும் 'தல' அஜித் வாக்களிக்க தவறியமை தமிழ்த் திரையுலகில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சொல்லிச் செல்கிறோம்.
*S.G.R