திருகோணமலை இரகசிய சித்திரவதை முகாம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
இந்நிலையில், திருகோணமலையில் இருப்பதாக கூறப்படும் இரகசிய சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த விபரங்கள் தங்களிடம் இருப்பதாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் சூக்காவின் தலைமையிலான தன்னார்வ குழு ஒன்று தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இயங்கும் இலங்கையின் நீதி மற்றும் உண்மைக்கான வேலைத்திட்டம் என்ற இந்த அமைப்பு இதனைக் கூறியுள்ளது.
குறித்த அதிகாரிகளே கைது செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களை இந்த சித்திரவதை முகாமிற்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் செயற்பட்டு வந்த குறித்த முகாம் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்களின் ரத்தத்தினால் முகாமின் சுவரில் எழுதி வைத்திருப்பதாகவும் குறித்த செயற்குழு தெரிவித்திருந்தது.
இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் மூன்று பாதுகாப்பு தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.