6,099 Views
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் திகதி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரில் ஒருவரான ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பராயமடையாத ஒருவரும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நிர்பயாவுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவத்தின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, '' எனது மகளின் பெயர் ஜோதி சிங். அதனை வெளிப்படையாக சொல்ல நான் வெட்கப்படவில்லை. இது போன்ற பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுபவர்களும் அவரது குடும்பத்தினரும் தான் வெட்கப்பட வேண்டும். எனது மகள் விடயத்தில், பராயமடையாத குற்றவாளிதான் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி அந்த குற்றவாளி விடுவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அவனை போன்றவர்களை வெளியில் விட்டால், இந்த சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். வயது குறைந்தவர் என்ற போர்வையில் அவன் விடுவிக்கப்பட்டால், இதில் என்ன நீதி இருக்கிறது? அவனுக்கு 16 வயதாக இருந்தால் என்ன? 18ஆக இருந்தால் என்ன? குற்றத்தின் தன்மையைதான் பார்க்க வேண்டும். வயதை பார்த்து முடிவெடுப்பதில் எந்த வித நியாயமும் இல்லை.
மற்ற குற்றவாளிகளைப் போலவே அவனுக்கும் தூக்குத் தண்டணை விதிக்கப்பட வேண்டும். மைனர் குற்றவாளிகள் சட்டத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாலியல் தொடர்புடைய வழக்குகளில் நீதிமன்றங்கள் உடனடியாக விசாரித்து தண்டனை அளிக்க வேண்டும்'' எனக் கூறினார்.
இந்த வழக்கில், ராம்சிங், வினே சர்மா, முகேஷ் சிங், பவான் குப்தா, அக்ஷய் தாக்குர் உள்பட 6 குற்றவாளிகள் பிடிபட்டனர். பராயமடையாத குற்றவாளியின் பெயர் அறிவிக்கப்படவில்லை.