கிழியுமா சிங்கம் சூர்யாவின் "மாஸ்" முகமூடி....??? - வலுக்கிறது தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பலை.தென்னிந்திய தமிழ்த் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். ஏனெனில் எந்தவொரு பின்புலமும் அற்ற நிலையில் திரையுலகில் காலடி வைப்பதும், நின்று நிலைப்பதும் கடினமானதொரு விடயமே. இவ்வாறான நிலையில் தமிழ்த் திரையுலகில் மின்னும் ஒரு சில பிரபல நட்சத்திரங்களை தவிர நடிகர் விஜய், சூர்யா உட்பட அனைவரும் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர்களே. இவ்வாறு வந்தவர்கள் தங்களது நற்பெயரை தக்கவைக்கின்றார்களோ...? இல்லையோ...? கெடுத்துக் கொள்வதற்கு மட்டும் தவறுவதில்லை.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என்று பெயர்பெற்ற நடிகர் சிவகுமாரின் வாரிசு நடிகர்கள் தான் இன்று முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கின்ற சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர். பிரபலமான நடிகராக இருந்தும் திரையுலகில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விரும்பாத, நல்ல பண்பான நடிகர் என்று பெயரெடுத்தவர் இந்த திரையுலக மார்க்கண்டேயர். இப்படியான நல்ல நடிகருக்கும் அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கும் யாரும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால் அவரது வாரிசான, நடிகர் சூர்யாவின் படத்திற்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் படம் "மாஸ்" என்பதும், முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்தியும் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் "பிரியாணி" என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் எல்லாருக்குமே தெரிந்த விடயம் தான். ஆனால் தெரியாத விடயமே இங்கு தான் ஆரம்பிக்கின்றது.
இலங்கையின் உள்நாட்டு அசாதாரண சூழ்நிலை, தென்னிந்திய அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் திரையுலகை சார்ந்தவர்கள் திரைப்படப் படப்பிடிப்புக்கள், கலைநிகழ்வுகள் போன்றவற்றை இலங்கையில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் தடையை மீறி செயற்படும் கலைஞர்களுக்கும், வெளியாகும் படங்களுக்கும் எதிராக தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் தமது எதிர்ப்பையும் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, இந்த எதிர்ப்பலைகளுக்குள் நடிகர் சூர்யாவும் அவரது "மாஸ்" படமும் சிக்கிக்கொள்ளவுள்ளதென தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் "மாஸ்" படத்தின் படப்பிடிப்பை ரகசியமான முறையில் இலங்கையில் வைத்து படமாக்கியிருக்கிறார்களாம் படக்குழுவினர். இதற்கு நடிகர் சூர்யாவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடித்துக் கொடுத்துள்ளாராம். ஏற்கனவே, தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பினால் இளையதளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த "கத்தி" படம் பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே ஒருவாறு வெளிவந்திருந்தது. அவ்வாறானதொரு எதிர்ப்புநிலை நடிகர் சூர்யாவிற்கு வரலாம் என திரையுலகினர் சொல்கிறார்கள்.
தன் பிள்ளைகளினுடைய நற்பெயருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டவர் சிவகுமார். அது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு உதவுகின்ற மனப்பாங்கையும், நற்பண்புகளையும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தவர் இவர். இதனால் அகரம் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து, தென்னிந்திய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் முகாம்களில் வசிக்கின்ற குழந்தைகளின் கல்விக்கும் சேர்த்து உதவுபவர்கள் இவர்கள். இப்படியாக ஈழ மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் சூர்யாவே, திரைப்படத்துறையின் தடையை மீறிச்சென்று இலங்கையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமை தமிழ் உணர்வாளர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளதாம்.
இந்தநிலையில், சூர்யாவிற்கும் அவரது "மாஸ்"படத்திற்குமான எதிர்ப்புநிலையின் தீவிரத்தை இப்போதே உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அதன்காரணமாக "நாங்கள் இலங்கைக்கு சென்றது உண்மைதான்... ஆனால் படப்பிடிப்புக்காக செல்லவில்லை. பொழுதுபோக்கிற்காக இடங்களை சுற்றிப்பார்க்க மட்டுமே சென்றோம்" என்று இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் உணர்வாளர்களிடம் சமாளிக்கிறாராம்.

ஆனால் “மாஸ்” பட எதிர்ப்பாளர்களோ, படம் வெளிவரட்டும். படத்தைப் பார்த்துவிட்டு அப்போது எங்கள் வேலையை நாங்கள் காட்டுகின்றோம் என கங்கணம் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவர்களது எதிர்ப்பலையிலும் சிறப்பாக நீச்சலடிக்கும் "மாஸ்" என்று படக்குழுவினர் ரகசியமாக கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில் இலங்கையில் இடம்பெற்ற படப்பிடிப்பு காட்சிகளை இனங்காண முடியாதென்றும், அனைத்துமே கடற்கரைக்காட்சிகள் என்பதால் அதைவைத்துக்கொண்டு இவர்களால் எதுவுமே செய்ய முடியாதென்றும் மார்த்தட்டுகிறாராம் பிரியாணி சமையற்காரர்.
பிரியாணி இயக்குனர் பிரச்சனைகளை மறைப்பாரா....? இல்லை தமிழ் உணர்வாளர்கள் சூர்யாவின் “மாஸ்” முகமூடியை கிழிப்பார்களா...? - ஆர்வத்துடன் கோடம்பாக்கம்.
*கணேசமூர்த்தி ராகவன்.