மரணம் சிலரின் விருப்பம் போல் அமைந்து விடுகிறது ...
ஆனாலும் ஒருவனின் ஆற்றல் கண்டு போற்றும் காலத்தில் கருணை இல்லாக் காலன் சிலர் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கையில் பார்த்திருக்கும் மனங்கள் கலங்கித் தான் போகின்றன ...
ஆர்ஜென்டினாவின் 5 ஆம் பிரிவு கழகம் ஒன்றிற்காய் விளையாடுகையில் களத்தின் எல்லையில் கட்டப்பட்ட சுவர் ஒன்றில் மோதி மரணித்த ஓர் இளைய வீரனின் மரணம் பல மனங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ..
இமானுவேல் ஒர்டிகா ..
21 வயது..

நேற்றையதினம் (14-05-2015) தன் கனவுகளை தான் விரும்பிய களத்தில் விட்டுவிட்டு உலகிற்கு விடைகொடுத்த நாள்... ஆம் இவன் மனதில் ஓராயிரம் கனவுகள் ..அத்துணையும் உதைப்பந்தாட்டம் பற்றியது மாத்திரமே ...இவன் சுவாசம் இவன் இதயம் இவன் கால்கள் நேசித்தது அது ஒன்றை மாத்திரமே ..அத்தகைய கனவுகளோடு வாழ்ந்த இமானுவேல் ஒர்டிகா .
இரு வாரங்கள் முன் விளையாடும் போது தலையில் பட்ட காயம் காரணாமாய் இருவாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்றைய தினம் உயிர் துறந்துள்ளான்...
இம்மரணம் எம்மனங்களின் கனதியை அதிகரிக்கச் செய்வதற்கு இன்னுமோர் காரணம் இவன் மரணம் தொடர்பாய் 2012 ஆண்டில் முகநூலில் இட்டிட்ட பதிவு ..அப்பதிவு இவன் தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து கட்டியம் கூறி விட்டானோ என்று இப்போது எமக்கு எண்ணத் தோன்றுகிறது ..
அதில் அவன் குறிப்பிடுகையில்

'' சில வேளைகளில் என் வாழ்நாள் முழுவதிலுமே என்னால் தொழில் சார் உதைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம்....சில வேளைகளில் இது நடக்கலாம் இல்லையேல் தொழில்சாரா சாதாரண வீரனாகவே இறுதி வரை இருந்துவிடலாம் ..எது எப்படி இருப்பினும் களத்தில் ஒவ்வொரு தடவையும் பந்தினை முகம் கொடுக்கும் போது என் கனவுகளிற்க்காய் மரணிப்பேன் ...அப்போது என் கால்கள் கூறும் இதனை நிறுத்து என்று ஆனால் என் இதயம் கூறும் தொடர்ந்து விளையாடு என்று ..."
"எனக்கும் தொழில் சார் வீரனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் என் காலணிகள் களத்தில் பிரிந்து போகும்..ஆனாலும் அவற்றை நான் மாற்றுவது கிடையாது.இரவு முழுவதும் அதனை தைத்து ஒட்டி மீண்டும் விளையாடுவேன் ,இருப்பினும் இதனை நான் நேசிக்கின்றேன் "
"உதைப்பந்தாட்டமே என் வாழ்க்கை ...அதுவே என் வாழ்வின் சோகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கின்றது ..என் உயிரைக்கூட இதற்காய் துறப்பேன் " என்றும் இவன் தன் முகநூலில் பதிவு செய்துள்ளான் ..வார்த்தைகள் பலிதமாகும் சிலர் வாழ்வினிலே. அது இவன் வாழ்விலும் நிதர்சனம் ஆகிய போதும், எம் மனங்கள் ஏனோ இம்மரணத்தை ஏற்றிட மறுக்கின்றது ..
களத்தின் மரணித்த இவ்வீரனின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம் .....#RIP#