இமயமலையிலிருந்து குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நேபாள அரசாங்கம், ஈடுபட்டு வருகின்றது. கடந்த மாதம் 14 திகதி அன்று, இமய மலையில் குப்பைகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்த நேபாள ராணுவம், சுமார் 5௦௦௦ KG குப்பைகளை அகற்றியுள்ளதாக, தற்போது தெரிவித்துள்ளது. இமயமலை பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை சுமார் 45 நாட்களில் அகற்ற நேபாள அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்த திட்டத்தில் 10,000 KG குப்பைகளை அகற்ற நேபாள அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படியே 5000 KG குப்பைகளை அகற்றியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை பொது இயக்குனர் தண்டு ராஜ் கிமைர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து ராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் மனித உடல்கள் சுற்றுலா பயணிகள் விட்டு சென்ற கூடாரம், வெற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள், மதுபான போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்த கழிவுகள், உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் திகதி, காத்மண்டுவில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு, பின்னர் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது என கூறப்படுகிறது.