நைஜீரியாவில் சுமார் 900 சிறுவர்கள் போகோஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, ஐநா அறிவித்துள்ளது.
நைஜீரிய அரசாங்கத்திற்கும், போகோஹரம் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறன.
குறித்த போகோஹரம் தீவிரவாதிகள், தமது யுத்தத்தின் மற்றுமொரு நகர்வாக பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறுவர்களை கடத்துவது, பாடசாலை மாணவிகளை கடத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு, அவர்களை பணயக் கைதிகளாக, தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்தும் கொடூர, நாசகார செயல்களை செய்து வருகின்றார்கள்.
அத்துடன் பெண் குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்தமையும் உலக நாடுகளையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், போகோஹரம் தீவிரவாதிகளிடம் இருந்து 106 சிறுமிகள் உட்பட மொத்தம் 894 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, இந்த போகோஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து அங்குள்ள மக்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக ''மக்கள் கூட்டு பணிக்குழு'' என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு மூலமாக 894 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இதுவரை மொத்தம் 1727 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மைதுகுரி என்கிற இடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற நைஜீரியாவிற்கான யுனிசெப் தலைவர் முகமத் போல் தெரிவித்துள்ளார்.