குழந்தைகளை விட இந்த உலகத்தில் பெரிய சந்தோசம் எதுவுமே இல்லை. ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் மாத்திரமின்றி ஒரு குடும்பமே குழந்தை வரவிற்காக காத்திருக்கும். குழந்தை கருவில் உருவான நாள்முதல் பிறக்கும் நாள்வரை தாயும் தந்தையும், ஏன் அவர்களின் மொத்த குடும்பமும், உலகிற்கு வரவுள்ள அந்த புதிய உயிரை மனதில் எண்ணி கொண்டாடிக் கொண்டிருக்கும். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்றால் இன்னுமொருபடி சந்தோசம்தான்
இரட்டைக்குழந்தைகளில், இரண்டாவது பிறக்கும் குழந்தையே முதலில் கருவில் உருவானதாகும். பொதுவாக இரட்டைக்குழந்தைகள் ஒரே நாளில் அடுத்தடுத்த அல்லது இரண்டு மூன்று நிமிட இடைவெளிகளில் தாயின் வயிற்றில் இருந்து பிரசவிக்கப்படுகிறார்கள். ஆனால் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு ஆண்டுகளில் ஏன் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டைக்குழந்தைகள் கேள்விப்பட்டிருப்போமா? அவ்வாறு நிகழ்ந்த சம்பவம் ஒன்று குறித்து பார்ப்போம்.
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தின் பெண்டெல்டன் நகரைச் சேர்ந்தவர்கள் டொன் கில்லியம் மற்றும் ஜேசன் டெல்லோ தம்பதியினர். இரட்டைக்குழந்தைகளை கருவில் தாங்கியிருந்த கில்லியமிற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இரவே கில்லியமிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 31ம் திகதி இரவு 11 மணி 37வது நிமிடத்தில் முதல் குழந்தை பிறந்தது. இதையடுத்து புத்தாண்டு தினமான ஜனவரி 1 (2020) அன்று நள்ளிரவு 12 மணி 7வது நிமிடத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதாவது முதல் குழந்தை ஒரு தசாப்தத்திலும் (1 ஜனவரி 2010- 31 டிசம்பர் 2019) அடுத்த குழந்தை வேறோரு தசாப்தத்திலும் (1 ஜனவரி 2020- 31 டிசம்பர் 2029) பிறந்தன. இரு குழந்தைகளும் நலமாக உள்ளன, ஜோஸ்லின், ஜாக்ஸன் என பெயரிட்டுள்ளோம் என அக்குழந்தைகளின் பெற்றோர்கள் சந்தோசமாக தெரிவித்துள்ளனர்.