புங்குடுதீவில் 18 வயதான மாணவி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீதுதாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதான மற்றுமொரு தொகுதி சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இன்று முன்னிலைப்படுத்தப்படவிருந்த 40 பேரில் 39 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஆறு பேருக்கு 2 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையோரை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் 130 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் 47 பேர் கொண்ட குழு கடந்த திங்கட் கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அத்துடன் நேற்று 43 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.