8,687 Views
கூகுள் தனது நிறுவனக் கட்டமைப்பில் பிரதான மாற்றமொன்றை கொண்டுவந்துள்ளது.
இதன்படி 'Alphabet' என்ற தலைமை நிறுவனமொன்றை உருவாக்கி அதன் கீழ் தனது மற்றைய வியாபார நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது.
இதன் கீழேயே இனி கூகுள் நிறுவனமும் இயங்கவுள்ளது.
பல துறைகளில் காலூன்றி வரும் கூகுள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் (தாய் நிறுவனத்தின் கீழ்) கொண்டுவந்துள்ளது.
தேடல் பொறி நிறுவனமாக அறியப்பட்ட கூகுள் . யுடியூப் , அண்ட்ரோய்ட் , ஜீ மெயில் என வியாபித்தது மட்டுமன்றி , தானியங்கி கார்கள் ,கூகுள் கிளாஸ் , இலங்கைக்கு வரவுள்ள பலூன் வழி இணைய வழங்கித் திட்டமான லூன் , முதுமையடைவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி வெவ்வேறு திட்டங்களுக்கு வெவ்வேறு திறமை கொண்ட பணிப்பாளர்கள் , வேறுபட்ட தொழில் கலாசாரம் , வெவ்வேறு வளங்கள் தேவையென கூகுள் கருதுகின்றது. மேலும் இதன் மூலம் நிறுவன ங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியுமெனவும் , நிறுவன ங்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியுமெனவும் கூகுள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கூகுளின் புதிய கட்டமைப்பு மாற்றமானது அதன் அதிக இலாபம் மிக்க தேடல் மற்றும் விளம்பர பிரிவுகளை அதன் பரீட்சாத்த முயற்சிகளில் இருந்து வேறுபடுத்தும் முயற்சியெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற நிறுவனக் கட்டமைப்பு முறையையே , வொரன் புபட்டின் 'பேர்க்ஷயர் ஹதவே' நிறுவனமும் கொண்டுள்ளது.
' Alphabet' இனை கூகுளின் ஸ்தாபகர்களான லெரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரே கண்காணிக்கவுள்ளனர். மேலும் இது அவர்களது பணியை இலகுபடுத்துமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க இதுவரை நாம் அறிந்த கூகுளும் , ' Alphabet' இன் கீழ் இயங்கவுள்ளது. இதன் கீழ் இயங்கும் பிரதான நிறுவனமாக கூகுள் இருக்கவுள்ளது.
அதுமட்டுமன்றி கூகுள் பிரிவிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதான இணையசார் சேவைகளை தவிர்த்து மற்றைய முயற்சிகள் வேறு வேறாக செயற்படவுள்ளது.
மேலும் இங்கு சிறப்பம்சம் என்னவெனில் கூகுளின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக , தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
ஆம் , இந்தியத் தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் குரோம் உலாவி உருவாக்கத்தின் முக்கிய நபரான சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராவார்.
சுந்தர் பிச்சை தொடர்பில் இந்திய ஊடகமொன்றில் வெளியான செய்திக் குறிப்பு கீழே:
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர்.
இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை.
மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்தது கூகுள்!
1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர்.
கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.
கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள் இரண்டிலுமே தற்போது சிஇஓ பதவியை வகிப்பது இந்தியர்கள் தான். உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை.