விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
எனினும் இத்தகவலை சரத் பொன்சேகா முற்றாக மறுத்துள்ளதுடன் , பிரபாகரன் தற்கொலைசெய்து கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்த த்தில் இந்தியா இலங்கைக்கு உதவியதாகவும் , நான் ஒரு போதும் எல்.டீ.டீ. ஈ இயக்கத்தை காட்டிக்கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இறுதிப் போரில் மேற்கொண்ட போர் வியூகத்தில் ஏற்பட்ட பிழைதான் அவர்களது தோல்விக்கு காரணம். அவர்கள் ஒரே இடத்தில் போராளிகளை ஒன்றாகக் குவிக்காமல் , கெரில்லா போர் முறையைமுன்னெடுத்திருந்தால் போரில் வெற்றி அடைந்திருப்பதுடன் மக்களையும் காப்பாற்றியிருக்கமுடியும்.
இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை இராணுவத்திடம் உயிரோடு பிடிபடுவதை பிரபாகரன் விரும்பமாட்டார். அவர் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்" என்றார்.