"கபாலி"க்கு வில்லன் யார்.......??? - புதிய தகவல்கள்.
இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் "கபாலி". இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இந்தநிலையில், மெதுமெதுவாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தப்படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
தமிழ்சினிமாவில் இதுவரைக்கும் ரஜினிக்கு என்றே இருந்த தனித்துவம், சினிமா பாணி என்பன வரவிருக்கும் "கபாலி" திரைப்படத்துடன் முற்றாக மாற்றமடைகின்றது என்றே சொல்லலாம். ரஜினியின் நடிப்பில் வெளிவந்த "லிங்கா" படம் தான் அவருக்கென்று தனித்துவமாய் கடைபிடிக்கப்பட்டு வந்த பாணியில் அமைந்த இறுதிப்படமாக இருக்கும் என்கிறார்கள் தமிழ்த்திரைத்துறையினர்.
குறிப்பிட்ட ஒரு சில இயக்குனர்கள், தனது எல்லாப்படங்களிலும் ஒரே தொழில்நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர் நடிகைகள் என ரஜினி படத்தில் இருந்துவந்த நிலை இயக்குனர் ரஞ்சித்தின் "கபாலி" படத்தின் மூலம் முடிவுக்கு வருகின்றதாம். அந்தவகையில், இரண்டே இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துடன் இசை இயக்குனர் சந்தோஷ் நாராயணன், 'அட்டைக்கத்தி' தினேஷ், ராதிகா ஆப்தே, தன்சிகா என இளவட்ட திரைக்குழு இணைகின்ற, "சூப்பர்ஸ்டார்" இன் முதல் படமாக அமையப்போகின்றது இந்த "கபாலி".
இது இப்படியிருக்க, படக்குழுவினருக்கு இடையில் நம்ம சூப்பர்ஸ்டார்க்கு வில்லன் யார் என்ற விவாதம் ஆரம்பித்திருக்கின்றது. இதில், நடிகர் பிரகாஷ்ராஜின் பெயரும் தேர்வு செய்யப்பட்டிருந்ததாம். இருந்தும், ஜோன்விஜய் என்ற நடிகர் அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டுள்ளதாகவும் கோடம்பாக்கம் சொல்கின்றது.
இதேவேளை, "கபாலி" படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் 17-ம் திகதி மலேசியாவில் படமாக்குவதாகத்தான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், 'மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்ட தற்போதைய சென்னையில் தான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் "மெட்ராஸ்"என்ற ஹிட் படத்தை எடுத்து பிரபலமடைந்ததால், ஒரு செண்டிமெண்ட் ஆக இயக்குனர் ரஞ்சித் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடங்கிருப்பதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.
*S. G. R