சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஏற்கனவே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, பல்வேறு தரப்பினரால் அறிக்கைகள் வெளியிடப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் இதுவரையில் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் இந்த முறை நாட்டின் ஜனாதிபதி மாத்திரமே தங்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அதுவரையில் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
மகசின் சிறையில் இந்த போராட்டம் இடம்பெறுவதை சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஸ்பகுமார உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகளின் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் அரசியல் கைதிகளின் பிரச்சினைத் தீர்வுக்கான சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
இதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை வகைப்படுத்தி பட்டியல் படுத்தப்பட வேண்டும்.
பெரும்பாலான அரசியல் கைதிகள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியமை போன்ற சிறிய குற்றங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவோ அல்லது பிணை வழங்கவோ முடியும்.
பலர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் பதியப்படாதுள்ளவர்களுக்கு பிணை வழங்க முடியும்.
அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவற்துறையினரை அவதானம் செலுத்த வைக்க வேண்டும்.
பலர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் இன்னும் இடம்பெறாத நிலையில் அது குறித்து அவதானம் செலுத்துவதுடன், அவர்களுக்கு பிணை வழங்கவும் முடியும்.
போதுமான சட்ட உதவிகளை வழங்கி அவர்களின்வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவுத்தலாம்.
அத்துடன், நாளாந்த விசாரணைகளை நடத்தி விரைவாக அவர்களின் வழக்குகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்த போது, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் முறுகல் நிலைகள் பதிவாகி இருந்தன.
இதனால் சில வன்முறைகளும் ஏற்பட்டிருந்தன.
இந்தமுறையும் அவ்வாறான வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதற்கு இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.