டெக்சாஸில் உள்ள ஏடி&டி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கால்பந்து உலகின் ‘இறுதிப்போட்டிக்கு முந்தைய இறுதிப்போட்டி’ என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஸ்பெயின் தனது கட்டுக்கோப்பான ஆட்டத்தினால் பிரான்ஸை நிலைகுலையச் செய்தது.
போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், ஆட்டத்தின் இரு பாதிகளிலும் தலா ஒரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் லாமினே யமால் மீது பிரான்ஸ் வீரர் லூகாஸ் டிக்னே செய்த தவறினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, ஸ்பெயின் வீரர் மிக்கெல் ஒயார்சபல் கோலாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ மிக நேர்த்தியாக பந்தை பிரான்ஸ் கோல் வலைக்குள் செலுத்தி ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தத் தொடரில் இதுவரை ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள ஸ்பெயினின் தற்காப்பு அரண், பிரான்சின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேயின் முன்னேற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. ஸ்பெயினின் இந்தத் தற்காப்பு நுணுக்கத்தை உடைக்க முடியாமல் பிரான்ஸ் வீரர்கள் திணறினர்.
பிரான்ஸ் அணி கோல் அடிக்கும் முயற்சியில் பல மாற்றங்களைச் செய்தும், ஸ்பெயினின் அரணை தகர்க்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம், ஸ்பெயின் அணி ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அல்லது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.
பிரான்ஸ் அணி சனிக்கிழமை மியாமியில் நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.