7,831 Views
மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கக்கூடிய 'ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்' மற்றும் 'ஜனாதிபதிஹதபிம' செயற்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனூடாக 1919 தொலைபேசி எண்ணுக்கு அழைத்து அல்லது மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலமாக நாட்டுமக்கள் தமது முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும் .
இந்நிலையில் இதுவரை சுமார் 2 ஆயிரம் முறைப்பாடுகள் வரை ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முறைப்பாடுகள் குவிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறைப்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முறைப்பாடுகள் மேற்கொள்ளும் செயற்பாட்டை இலகுபடுத்தும் பொருட்டு அனைத்து கையடக்க மற்றும் திறன் பேசி இயங்குதளங்களிலும் செயற்படக்கூடிய வகையிலான அப்ளிகேசன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயனர்களுக்காக வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
1919என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்கதொலைபேசிகளூடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.
அதேவேளை சிங்களம், தமிழ் மற்றும்ஆங்கிலமொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.