பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே படங்களில் கோடம்பாக்கத்தின் முன்னணி இயக்குனராகிவிட்ட கார்த்திக் சுப்புராஜ், நல்ல படைப்பாளிகளையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியொடு கோலிவுட்டில் வாய்ப்பு தேடி அலையும் திறமைசாலிகளையும் இணைக்கும் ஒரு இயக்கமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளார். இதன் தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பேசினார். அவர் தன்னுடைய பேச்சில், "சினிமாவில் வரும் அனைவரும் ரஜினிபோல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அவருடைய இடமான சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறு.
சாதாரண கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராக மாறவில்லை. அதற்கு பின்னர் பலவருடங்கள் அவர் கடுமையாக உழைத்த உழைப்பு இருக்கின்றது. சினிமாவுக்கு பத்து படங்கள் ஹிட் கொடுத்தவுடன் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படக்கூடாது. அப்படி ஆசைப்பட்டால் அவர்கள் இருக்கின்ற இடத்தையும் இழந்துவிடுவார்கள்" என்று பேசியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக காயை நகர்த்தி வரும் விஜய்யை தான் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.
எஸ்.ஜே.சூர்யா நடித்து, இசையமைக்கும் 'இசை' படம் வெளிவரவுள்ள நேரம் இப்படியான சர்ச்சை கிளம்புவது நல்லதா கூடாதா?
அவருக்கே வெளிச்சம்.
சினி CID