"செல்லமே"எனத் தொடங்கி இப்போது "ஆம்பள" என நெஞ்சை நிமிர்த்தி வளர்ந்து நிற்கிறார் விஷால். உதவி இயக்குனராக கோடம்பாக்கத்தில் கால் பதித்து தற்போது வரிசைகட்டி பல படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார் இந்த "சிக்ஸ்பெக்" கறுப்புக்கட்டழகன்.
இயக்குனர் சுந்தர்.சி யின் இயக்கத்தில் "ஆம்பள" படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஷால், நடிப்பில் பெயர் எடுத்தாரோ...? இல்லையோ? சர்ச்சைகளின் மூலம் பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார். திருட்டு VCD ஒழிப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் நடிகருமான சரத்குமாருடனான முறுகல் என தினந்தினம் ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறார் எனச் சொல்லலாம்.
இது இவ்வாறிருக்க, தமிழ் சினிமாவில் விஷால் தனக்கென்றொரு இடத்தையும், ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளக் காரணமாக அமைந்தவர் யார் என்றால் இயக்குனர் லிங்குசாமி தான். அவர் இயக்கிய படம் தான் விஷாலின் இரண்டாவது படமான சண்டைக்கோழி. "சூப்பர்ஹிட் படமான சண்டைக்கோழி" தான் ரசிகர்களிடம் விஷால் என்ற நடிகனை ரசிகர்களிடம் கொண்டுசேர்த்தது என்று சொல்லலாம்.
விஷாலின் தந்தையின் தயாரிப்பில் உருவான இந்த "சண்டைக்கோழி" படப்பிடிப்பின்போது இயக்குனர் லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் இடையில் மனக்கசப்பு தோன்றியதாகவும், அதனால் பலவருடங்களாக பேசாமல் இருந்த இவர்கள் சிலகாலத்துக்கு முன்னர் நண்பர்கள் மீண்டும் ஆகியுள்ளார்களாம். நண்பர்களானதோடு நிறுத்தாமல் திரைப்படத்திலும் இணையவுள்ளார்களாம்.
"ஆம்பள" படத்தை முடித்ததும் வேந்தர்மூவீஸ் தயாரிக்க இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் மற்றொரு புதிய படத்தில் நடிக்கவுள்ள விஷால், அதனைத் தொடர்ந்தே லிங்குசாமியின் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் லிங்குசாமியும், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் "எண்ணி ஏழு நாட்கள்" படத்தை முடித்த பின்னரே விஷால் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.
விஷாலும் லிங்குசாமியும் மீண்டும் இணையவிருக்கும் இந்தப்படத்தின் கதை சண்டைக்கோழி இரண்டாம்பாகம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஞ்சான் இல்லையே... சண்டைக்கோழி இரண்டாம்பாகம் தானே என்ற ஆறுதலில் ரசிகர்கள்.
*கணேசமூர்த்தி ராகவன்.