தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
“ஒவ்வொரு நடிகனுக்கும் கரியரில் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் எல்லோரும் இத்துடன் கரியர் முடிந்துவிட்டது, இனி எழுந்து வரமுடியாது என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழலில் அனைவரும் என் மீது நம்பிக்கை இழந்தனர். கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடிக்க முடியாமல் நான் வீட்டில் இருந்தேன். அதற்கு காரணமான சில பேர் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
இந்தத் தருணத்தில் நான் முக்கியமாக ஒருவருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என்னுடைய சுய வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்பட்ட நேரத்திலும், இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக என் கூட இருந்து, என் கஷ்டங்களில் என்னை ஊக்கப்படுத்தி, உங்கள் அனைவரின் முன்பும் இந்தளவு பாஸிட்டிவாக என்னை நிறுத்தியதற்கு காரணமாக இருந்த எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு மிகவும் நன்றி. வேறு யாராவதாக இருந்தால் இந்நேரம் ஓடியிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
சாய் தன்ஷிகா விஷால் இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தைத் திறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக 48 வயதாகும் விஷால் தெரிவித்திருந்தார்.