இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 பேர் பலியாகியுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை தொடக்கம் இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் உள்ள சென்டேனி பிராந்தியத்தில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தமை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள், வீட்டிற்குள்ளேயே அடைபடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த கடுமையான மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல குடும்பங்கள், வீடுகள் பொருட்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மழை வெள்ளம் காரணாமாக இதுவரை 50 பேர் வரை உயிரிழந்திருப்பதாக, இந்தோனேசிய அரசாங்கத் தகவகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அங்குள்ள சென்டேனி பிராந்தியத்தில் 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முகாம்களில் தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் வரை தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வழங்கும் பணிகள், முன்னெடுக்கப்படுவதாக இந்தோனேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.